தெய்வ மச்சான் விமர்சனம்

0
221

கதையின் நாயகனான விமல் சிறு வயது முதல் கனவு காண்கிறார். கனவில் வெள்ளை குதிரையில் சந்தனம் பூசிக்கொண்டு தோன்றும் ஒருவர், சொல்லும் அனைத்து விஷயங்களும் உண்மையில் நடக்கிறது. இந்த கனவு அவருடைய தங்கையின் திருமண விஷயத்திலும் தொடர்கிறது. தங்கையின் திருமணம் திட்டமிட்டபடி நடைபெற்றதா? அல்லது கனவில் சொன்னபடி நடந்ததா? என்பதே ‘தெய்வ மச்சான்’ படத்தின் கதை.

விமலுக்கு வேட்டி கட்டினால் எப்போதும் நன்றாகத்தான் இருக்கும். இது கிராமத்து பின்னணியில் அமைந்த படம் என்பதால் படம் முழுவதும் அவர் வேட்டி சட்டையுடன் அமர்க்களமாக வருகிறார். ‘தபால் கார்த்தி’ என்ற இந்தப் பாத்திரமும் இலகுவாக இருக்க அதைப் போகிற போக்கில் செய்து விட்டுப் போகிறார்.

அவர் தங்கையாக வரும் அனிதா சம்பத்துக்கு திருமணம் ஆகாத நிலையில் கண்களை கசக்கி கொண்டிருக்கும் வேடம். ஆனால் கடைசியாக பார்த்த மாப்பிள்ளை அவருக்கு பிடித்துப் போக அதற்குப்பின் அண்ணனாவது ஒண்ணாவது என்று கல்யாணத்திலேயே அவர் குறியாக இருப்பது அட்டகாசம்.

ஜமீனாக வரும் ஆடுகளம் நரேனும் அவர் தம்பியும் அதகளப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் அந்த தம்பி கிளைமாக்சில் விமலைக் கொல்ல நினைக்கும் போது என்ன ஆகிறது என்பதில் ஒரு வெடிச்சிரிப்பு தியேட்டரில் பரவுகிறது.

விமலின் அப்பாவாக வரும் பாண்டியராஜனை இன்னும் அதிகமாக நகைச்சுவைக்கு பயன்படுத்தி இருக்கலாம். அந்த ‘தபால் கார்த்தி’ காமெடி படம் முழுவதும் நன்றாக எடுபட்டிருக்கிறது.

விமலின் அத்தையாக வரும் தீபா சங்கர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பானவை.

விமலின் மாப்பிள்ளையாக வரும் வாட்சன் வீரமணிதான் படத்தின் திரைக்கதையையும் இயக்குனருடன் சேர்ந்து எழுதி இருக்கிறார். கிராமத்துப் பின்னணியில் 90களில் படம் பார்த்த திருப்தியை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கேமில் ஜே அலெக்ஸ்.

தெய்வ மச்சான் கண்டிப்பாக சிரித்துவிட்டு வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here