போத்தனூர் தபால் நிலையத்தில் 1990களில் நடக்கும் ஒரு பணத் திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீண். அந்த தபால் நிலையத்தில் இருக்கும் பணத்தை இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என நினைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார் அதன் அதிகாரி. போகிற வழியில் அந்தப்பணம் காணாமல் போகிறது. நேர்மையான அந்த அதிகாரி துடித்துப் போகிறார்.அதற்கான தண்டனையை ஏற்று சிறைக்குச் செல்லத் தயாராகிறார். அந்த நேரத்தில் படித்துவிட்டு சொந்தத் தொழில் தொடங்க அலைந்து கொண்டிருக்கும் அவர் மகன், அந்தப் பணத்தைக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார். பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.தொண்ணூறுகளின் உடைகள், பொருட்கள், தலைமுடியலங்காரம் ஆகிய எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலிராவ், நண்பராக வரும் வெங்கட்சுந்தர், அப்பா ஜெகன்கிரிஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். நாயகன் துப்பறிந்து ஒவ்வொரு படியாக முன்னேறும்போது ஒவ்வொரு வாழ்க்கைமுறை வெளிப்படுகிறது.நடுத்தர வர்க்கத்துக்கு எல்லாக் காலங்களிலும் பணம்தான் பிரச்னை.வருமானம் போதவில்லை என்பதும் முக்காலத்துக்கும் பொதுச்சிக்கல்.
படம் முழுக்க மெதுவாகப் போனாலும் தெளிவான நடை இருக்கிறது. கடைசி பத்து நிமிடங்களில் நடக்கும் அதிரடி நிகழ்வுகள் படத்துக்குத் தெம்பூட்டுகின்றன. அதிலும் அடுத்த பாகத்துக்கான முன்னோட்டம் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இப்போது தகவல் தொடர்புகளின் உச்சத்தில் இருக்கிறோம். அக்காலத்தில் ஒரேயொரு தகவல் தொடர்பு மையமாக இருந்த அஞ்சலகம் மற்றும் அதன் பின்னணியில் எடுக்கப்பட்டிருப்பது நல்ல முயற்சி.















