தீயவர் குலை நடுங்க திரை விமர்சனம்

0
205

ஜெபநேசன் என்ற எழுத்தாளர் மர்ம நபரால் கொல்லப்படுகிறார். அந்த வழக்கை கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்) விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதே சமயம் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் மீரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மெட்ரிமோனி மூலம் சந்திக்கும் ஆதியை அவர் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். இருவரும் பழக ஆரம்பிக்க, மனநலம் சரியில்லாத அம்மாவை உடன் இருந்து கவனித்துக் கொள்வதால்தான் ஆதியை திருமணம் செய்துகொள்ள நினைத்ததாக மீரா அவரிடமே கூறுகிறார். அர்ஜூன் தேடும் ஒவ்வொரு தடயமும் கொலைகளுக்கும் ஆதி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கும் இடையில் பயங்கரமான தொடர்பை காட்டத் தொடங்கும் போது கதை திடீர் திருப்பங்களை எடுத்து யார் உண்மையான குற்றவாளி? என்பதே மீதிக்கதை.

காவல்துறை சீருடை அணியாமல் வலம் வந்தாலும், தனது கம்பீரமான நடிப்பு மூலம் காவல்துறை அதிகாரியாக அர்ஜூன் மிளிர்கிறார். கதையின் நாயகி என்றாலும், குறிப்பிட்டு சொல்ல முடியாத சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் அசத்தியிருக்கிறார். ஆட்டிசம் பாதித்த சிறுமியாக நடித்திருக்கும் அனிகா, மிக இயல்பாக நடித்து வியக்க வைக்கிறார். பிரவீன் ராஜா, லோகு.என்.பி.கே.எஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.

பரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் கேட்கலாம். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு கதை திரைக்கதைக்கு நிகரான பங்கை வகித்து படத்தைப் பார்க்க வைத்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கிறார் தினேஷ் லட்சுமணன்.திரை மொழிக்குத் தேவையான திடுக்கிடும் திருப்பங்களுடன் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here