இயக்குநர் எ.கே.குமார் இயக்கத்தில் ஜனனி, விசாகன், கவுசிக், ஹரிஹரன் ராஜு, ரமேஷ் கண்ணா, திவ்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’நிழல்’.
ரமேஷ் கண்ணாவின் மகளான நாயகி ஜனனி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். நாயகனான சப் இன்ஸ்பெக்டர் விசாகனை காதலிக்கிறார். இந்நிலையில் மருத்துவ மனையில் பெண் ஒருவர் கற்பழித்து கொடூரமாக எரித்து கொலை செய்யப்படுகிறார்.
இந்நிலையில் மருத்துவ மனையின் உரிமையாளரின் மகன் ஹரிஹரன் ராஜு மற்றும் அவருடைய இரண்டு நண்பர்களை ஜனனி கொடூரமாக தாக்கி அவர்கள் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு தாக்கி மருத்துவ மனையில் சேர்கிறார். இதனையடுத்து இந்த வழக்கை சப் இன்ஸ்பெக்டர் விசாகன் விசாரிக்க இவர்களை தாக்கியது ஜனனி என தெரிந்து கொள்கிறார். இறுதியில் 3 பேரை ஜனனி சாகும் அளவிற்கு தாக்கியதற்கான காரணம் என்ன? எதற்காக ? என்பதை சப் இன்ஸ்பெக்டர் விசாகன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’நிழல்’ படத்தின் மீதிக்கதை.
ரம்யா , சரண்யா கதாபாத்திரத்தில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி இரண்டிலும் வேறுபட்ட நடப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் சப் இன்ஸ்பெக்டர் விசாகன் நேர்மையான முறையில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. மற்றொரு நாயகனாக வரும் கவுசிக் வக்கீலாக வாதாடும் காட்சிகள் ரசிக்க முடிகிறது. ரமேஷ் கண்ணா , சபீதா ஆனந்த் , அபிஷேக் , ஹரிஹரன் ராஜு, திவ்யா கிருஷ்ணன் என மற்ற வேடங்களில் வரும் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அபுபக்கர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. மோகன் குமாரின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எ.கே.குமார் இத்திரைப்படத்தில் பணம் படைத்தவர்களால் ஏழை பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளையும், நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றால் அங்கு நீதி மறுக்கபப்டுவதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.















